தற்கால விஞ்ஞானிகளால் இன்று கண்டுபிடிக்கப்படும் இயற்கை ரகசியங்களை, அன்று கருவி, ஆராய்ச்சிக்கூடம் இன்றி சித்தர்கள் எவ்வாறு உணர்ந்தார்கள் என்ற கேள்வி ஒரு வியப்பூட்டும் புதிர். விஞ்ஞானம் என்பது புற உலகை கருவிகளின் உதவியோடு ஆராய்ந்து உண்மைகளை வெளிக்கொணரும் முயற்சி. ஆனால், சித்தர்கள் அக உலகை தங்களின் தவ வலிமையால் உணர்ந்து இயற்கையின் ரகசியங்களை அறிந்தவர்கள். இந்த இரண்டு முறைகளும் வெவ்வேறானவை, ஆனால் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை.
இன்றுவரை கண்ட விஞ்ஞானம் அனைத்தும் மனித உடலுக்குள் நடைபெறும் அதிசயங்களுக்கு அப்பாற்பட்டதல்ல. சுத்தவெளியிலிருந்து பரமாணுக்கள் தோன்றின. பரமாணுக்கள் சேர்க்கையால் பஞ்சபூதங்கள் ஏற்பட்டன. நிலம், நீர், நெருப்பு, காற்று என்ற நான்கு பூதங்களுடன் விண் என்ற ஐந்தாவது பூதமான உயிர்ச்சக்தி சுழலும்பொழுது, அதன் தடை உணர்தலாக உணர்ச்சிநிலை பெற்று, ஓரறிவு முதற்கொண்டு தொடங்கிய பரிணாமத்தின் உச்சமாக வந்த ஆறறிவு பெற்றவன் தான் மனிதன்.
இந்த மனித உடலிலே, உயிர், ஜீவகாந்தம், மனம் என்ற நான்கும் சேர்ந்து இயங்கும் போது ஏற்படக்கூடிய ரசாயன இயக்கம், மின்சார இயக்கம், காந்த இயக்கம் இவற்றை கடந்து இப்பிரபஞ்சம் முழுவதும் நடைபெறக்கூடிய இயக்கங்கள் வேறெதுவும் இல்லை. இந்த உடலில் நடைபெறாத இரகசியத்தை இதுவரை எந்த விஞ்ஞானமும் கண்டுபிடிக்கவில்லை. கண்டுபிடிக்கவும் இயலாது. ஏனென்றால், மனித உடலே பிரபஞ்சத்தின் ஒரு சிறிய மாதிரி. அதனுள் அடங்கியுள்ள ரகசியங்கள் பிரபஞ்சத்தின் ரகசியங்களே.
அத்தகைய முறையில் பரிணாமத்தின் உச்சமாக உள்ள மனித உடலின் அற்புதமான அமைப்பையும், இயக்கத்தையும் அகத்தவச்சாதனையால் அறிந்தவர்கள் சித்தர்கள். “இந்த உடலிலுள்ள அணுக்கள், பேரணுக்கள், செல்கள் இவைகள் எவ்வாறு அடுக்கப்பட்டும், சேர்த்துப்பிடித்துக்கொள்ளப்பட்டும் இருக்கின்றன” என்பதையெல்லாம் அறிந்தவர்கள் சித்தர்கள். அவர்கள் உடலை ஒரு ஆய்வகமாக மாற்றினர். தங்களின் மனோ சக்தியால் உடலின் ஒவ்வொரு அணுவையும் ஆராய்ந்தனர்.
அப்படி செல்களாலான கட்டிடமாகிய உடலின் கட்டுமானத்திற்கும், கட்டுக்கோப்புக்கும், உறுதிக்கும், நீடிப்புக்கும் வேண்டிய காந்த சக்தியை எவ்வாறு பெற்று, எவ்வாறு அதை மின் சக்தியாக மாற்றி, ஆங்காங்கே பல ரசாயனங்களை தோற்றுவித்து இயக்கநியதியோடு உடல் என்ற அற்புதமான நிலையம் இயங்குகின்றது என்பதையெல்லாம் அறிந்தவர்கள் சித்தர்கள். உடலின் இயக்கத்தை மட்டுமல்ல, மனதின் இயக்கத்தையும் அவர்கள் அறிந்திருந்தனர்.
“மனித உடலின் இயக்கங்களையெல்லாம் உணர்ந்துகொள்வதோடு, பிற உயிரில் ஏற்படும் இன்ப துன்பங்களையும், பிற பொருட்களின் இயக்கங்களையும் கூட அறிவு எவ்வாறு உள்நுழைந்து அறிந்து வருகிறது” என்றும் சிந்தித்துப்பார்த்தார்கள். ஒவ்வொரு பொருளிலிருந்தும் வருகின்ற அலைகள் மோதுதல், பிரதிபலித்தல், சிதறுதல், ஊடுறுவுதல், இரண்டினிடையே முன் பின்னாக ஓடுதல் என்ற ஐந்து தன்மைகளைப் பெறுகின்றன. என்பதை சித்தர்கள் உணர்ந்தார்கள்.
இந்த அலைகள் பஞ்ச பூதங்களாலான பருப்பொருட்களில் மோதும்போது அழுத்தம், ஒலி. ஒளி, சுவை, மணம் அத்துடன் மனித உடலிலே புலன் கடந்த நிலையில் மனமாகவும் மார்ச்சி பெறுகின்றன என்பதையும் தங்கள் தவ வலிமையால் உணர்ந்துகொண்டார்கள். அந்த விரிந்த மனநிலையிலே பிரபஞ்ச உற்பத்தி இரகசியங்கள் எல்லாம் அவர்கள் உள்ளத்திலே நிறைந்திருக்கும். எல்லா வினாக்களுக்குமான விடைகளும் அவர்களுக்குள்ளாகவே இருக்கின்றன. எனவே அங்கிருந்தே தங்கள் உள் நோக்கால் எடுத்துக்கொண்டார்கள். சித்தர்களுக்கு தனியாக ஆராய்ச்சி சாலை எதுவும் தேவையில்லை.
ஆராய்ச்சி சாலை என்று வைத்தால் ஏதாவது ஒரு பொருளைப் பற்றித்தான் ஆராய இடமிருக்கிறது. இந்த உடலையே எடுத்துக்கொண்டு ஆராய்ந்தால் பிரபஞ்சத்தில் உள்ள எல்லா ரகசியங்களையும் பற்றி ஆராய முடியும். அந்த முறையில் உடல் விஞ்ஞானத்தை அறிந்தவர்கள் சித்தர்கள். நீங்களும் முயன்றால் ஒரு சித்தராக சிறப்புறலாம். அத்தகைய ஆற்றல் மனிதனாகப் பிறந்த எல்லோரிடத்திலுமே அடங்கியுள்ளது. சித்தர்கள் காட்டிய பாதையில் பயணித்தால், நாமும் இயற்கை ரகசியங்களை உணரலாம்.
வாழ்க வளமுடன் -வேதாத்திரி மகரிஷி